லக்னௌ: உத்தரபிரதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி ஒரு பொருட்டாகவே இருக்க மாட்டார் என்று மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தனியாகவும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கவுள்ளன. அதனைச் சமாளிக்க உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை உ.பி கிழக்கு பொதுச் செயலாளராக அரசியலில் களமிறக்கியுள்ளது. பிரியங்காவின் வருகை இவர்களது வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி ஒரு பொருட்டாகவே இருக்க மாட்டார் என்று மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சிக்காக ஏற்கனவே பிரியங்கா இரு தொகுதிகளில் பிரசாரம் செய்தார். ஆனால் அவரால் எந்த முடிவையும் கொடுக்க முடியவில்லை. எங்களுடைய தலைவர்கள் மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 74 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.