ரஃபேல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு இடைத் தரகராகச் செயல்பட்டதன் மூலம் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதியிட்ட ஒரு மின்னஞ்சலின் அச்சு நகலைக் காட்டி ராகுல் காந்தி கூறியதாவது:
ஏர்பஸ் நிறுவனத்தின் செயலதிகாரி நிக்கோலஸ் சாமுஸ்ஸி அனுப்பியுள்ள மின்னஞ்சல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு 10 நாள்களுக்கு முன்னர், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு அனில் அம்பானி சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியப் பிரதமரின் சுற்றுப் பயணத்தின்போது அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தின் உருவாக்கம் குறித்தும் அம்பானியுடன் விவாதித்தோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே அது குறித்து அனில் அம்பானிக்குத் தெரிய வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில், பிரான்ஸ் அரசுக்கும், அனில் அம்பானிக்கும் இடைத்தரகராக நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார் என்றார் ராகுல் காந்தி.