முகப்பு
இந்தியா

கொல்கத்தா காவல் அதிகாரி ஊர் திரும்ப சிபிஐ அனுமதி

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் தொடர்ந்து 5-வது நாளாக புதன்கிழமையும்

Updated On : 14 பிப்ரவரி 2019, 12:51 am IST
பகிர்:


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் தொடர்ந்து 5-வது நாளாக புதன்கிழமையும் சிபிஐ விசாரணை நடத்தியது. பின்னர் அவர் கொல்கத்தா செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில், முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய சாரதா நிதி நிறுவனம், ரோஸ் வேலி ஆகிய நிறுவனங்களின் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக ராஜீவ் குமாருக்கு எதிராகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முற்பட்டது. ஆனால், அவர் அதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில், சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. அப்போது, ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சிபிஐ முன் ஆஜரான ராஜீவ் குமாரிடம் கடந்த 5 நாள்களாக விசாரணை நடைபெற்றது. சிபிஐ மூத்த அதிகாரிகள் சுமார் 12 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை விசாரணையை தொடங்கினர். ஏறத்தாழ 30 மணி நேரம் விசாரணை நீடித்தது. புதன்கிழமை நண்பகல் வரை விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை எதிர்கொள்வது தொடர்பான பணிகளுக்காக கொல்கத்தா திரும்ப வேண்டும் என்று ராஜீவ் குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதியளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.