அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 16-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிமுக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக, ரூ.3,600 கோடியில் ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் மிஷெல் கடந்த டிசம்பர் மாதம் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, மிஷெலிடம் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மிஷெல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட 60 நாள்களுக்குள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். கடந்த டிசம்பர் 22-ஆம் தேதியிலிருந்து என்னிடம் நடத்தி வந்த விசாரணை முடிவு பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், என் மீது குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மிஷெலுக்கு ஜாமீன் வழக்கக் கூடாது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு தரப்பினரும் தங்கள் பதில்களை 15-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவு 16-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.