பனாஜி: மனோகர் பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா மாநில முதல்வராக இருப்பார் என்று, அம்மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் நிலவும் கூட்டணி ஆட்சி தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா மாநில முதல்வராக இருப்பார் என்று, அம்மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள தனது கலங்குட்டே தொகுதி கிராமப் பஞ்சாயத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் செவ்வாயன்று அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மனோகர் பாரிக்கர் எப்போதும் ஓய்வு எடுக்கவே விரும்பாத ஒருவராவார். அவர் இந்த உலகில் உயிருடன் இருக்கும் வரை, முதல்வர் நாற்காலியில் இருந்து விலக மாட்டார். அவர் கோவா மாநில மக்களுக்காக உழைத்துக் கொண்டேதான் இருப்பார்.
அவர் தனது நினைவுடன் செயலாற்றி, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் வரையில் இந்த அரசாங்கம் தொடந்து செயல்படும்.
அவரது உடல்நிலை உள்ளிட்ட மற்ற எல்லா விஷயங்களும் கடவுள் கையில்தான் உள்ளது. அவருக்கு எதுவும் நேர்ந்தால் பின்னர் அப்போது என்ன செய்ய வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.