வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகள் வரும் 27-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசனை நடத்துகின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய உத்திகளை வகுக்கவுள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கப்படும் என்றும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் 27-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை எதிர்க்கட்சிகள் வகுக்கவுள்ளன.
இடதுசாரி கட்சிகள், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இணைவதில்லை என்று முடிவெடுத்துள்ளதால், இந்தக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.