அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகல்
அயோத்தி விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் தாமாக விலகினார்.
புது தில்லி: அயோத்தி விவகாரம் குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி லலித் தாமாக விலகினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு அமர்வு கூடியதும், முஸ்லிம் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், கடந்த 1994ம் ஆண்டு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் சார்பில், தற்போதைய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் நீதிபதி லலித் ஒரு வழக்குக்காக ஆஜரானார் என்று குறிப்பிட்டார். ஆனால் அதற்காக அவரை இந்த அரசியல் சாசனத்தில் இருந்து விலக வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Advertisement
இதைக் கேட்டதும், அயோத்தி விவகாரம் குறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி லலித் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, என்.வி. ரமணா, யு.யு.லலித், டி.ஒய். சந்திராசூட் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியிட்டது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதன் மீது 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.