பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார்.
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட முன்வடிவுக்கு நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவை சட்டமாக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்களுக்கு ஏற்கெனவே மொத்தமாக வழங்கப்படும் 50 சதவீத ஒதுக்கீட்டுடன், பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கும் வகையில் கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.