பீமா-கோரேகான் வன்முறை தொடர்பாக தனக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சமூக ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், பீமா-கோரேகான் வழக்கு விசாரணையில் குறுக்கிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்வலர்கள், வன்முறையைத் தூண்டும் விதமாகவும், வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கிலும் பேசியதாலேயே வன்முறை ஏற்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மீது புணே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யுமாறு தெல்தும்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவரைக் கைது செய்யத் தடை விதித்திருந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.