புது தில்லி: அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகான் நிறுவனம் இதுவரை ரூ.100 கோடி அபராதத் தொகையை செலுத்தாதல், அடுத்த 24 மணி நேரம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
அபராதத் தொகையை செலுத்தாதது குறித்து விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், எந்த தடை உத்தரவும் பெறாமல், அபராதத் தொகையை இதுவரை செலுத்தாதது ஏன்? இனி உங்களுக்கு எந்த கால அவகாசமும் வழங்கப்படாது. ஜனவரி 18ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், வோல்ஸ்வேகான் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குநர் கைது செய்யப்படுவார், இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வோல்ஸ்வேகான் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து மாசுகளை பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றியது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.