தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுகையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவோம் என்று ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதேபோன்றதொரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை தில்லியில் நடத்த ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில், "மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்தவுள்ளார். இந்தப் பேரணியில் பங்கேற்க அனைத்து முக்கியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்தக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தன.