2019-2020ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி, அல்வா தயாரிப்பு பூஜையுடன் தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.
தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மத்திய நிதித் துறை இணையமைச்சர்கள் சிவபிரதாப் சுக்லாவும், பொன்.ராதாகிருஷ்ணனும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அல்வா தயாரித்த பிறகு அதை நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அவர்கள் பகிர்ந்தளித்தனர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
நிதித் துறைச் செயலர் ஏ.என்.ஜா, பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க், வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே, முதலீடு மற்றும் பொதுச்சொத்துகள் நிர்வாகத் துறையின் செயலர் அதானு சக்கரவர்த்தி, நிதிச் சேவைகள் செயலர் ராஜீவ் குமார் மற்றும் பட்ஜெட் தயாரிப்பில் தொடர்புடைய அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நிதியமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணி, அல்வா பூஜையுடன் தொடங்கப்படுவது வழக்கம். பூஜைக்குப் பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை அமைச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது.
தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும், முக்கிய அதிகாரிகள் மட்டும் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.