ஜேட்லிக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத்
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் 2 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவப் பரிசோதனைக்காக, கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்காக, அவருக்கு செவ்வாய்க்கிழமையன்று திசு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
66 வயதாகும் அவருக்கு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அவர் பொறுப்பு வகித்து வந்த நிதித் துறை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், சுமார் 100 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் நிதித் துறை பொறுப்பை ஜேட்லி ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஜேட்லி தற்போது அமெரிக்கா சென்றுள்ளதால், அவரது பொறுப்புகள், தற்காலிகமாக பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜேட்லி 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையிலும், தற்கால அரசியல் விவகாரங்கள் குறித்து முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக தனது கருத்துகளை உடனுக்குடன் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.