சட்டத்துடன் விளையாட வேண்டாம்; நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது: உச்ச நீதிமன்றம் காட்டம்
எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் சட்டத்துடன் விளையாட வேண்டாம் என்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கூறியுள்ளது.
புது தில்லி: எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் சட்டத்துடன் விளையாட வேண்டாம் என்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கூறியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் குறித்து கருத்துக் கூறிய நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியதாவது, ஐஎன்எக்ஸ், ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணைகளுக்காக மார்ச் 5,6,7 மற்றும் 12ம் தேதிகளில் அமலாக்கத் துறை முன்பு நேரில் ஆஜராகி கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், பிப்ரவரி 10 முதல் 26ம் தேதி வரை நீங்கள் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் செல்லுங்கள். ஆனால், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று கூறிய நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தின் வழக்குரைஞரிடம், கார்த்தி சிதம்பரத்திடம் சொல்லுங்கள், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு. நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை, உங்களிடம் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டி உள்ளது. ஆனால், அதனை இப்போது சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலரிடம் ரூ.10 கோடியை டெபாசிட்டாக செலுத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கக் கோரிய போது, உச்ச நீதிமனறம், "யார் அது கார்த்தி?, நீங்கள் சொல்வது கார்த்தி சிதம்பரமா? தற்போது அவர் எங்கே இருக்கிறாரோ அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். எங்களுக்கு இதைவிட பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.