பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 261 இந்தியர்கள் உள்ளனர். இந்த விவரத்தை இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் அரசு அறிக்கையாக அளித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2018 மே 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிறையில் உள்ள இரு நாட்டு கைதிகள் தொடர்பான விவரத்தை ஆண்டுக்கு இருமுறை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி பாகிஸ்தானில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த விவரம் அந்நாட்டு தூதரகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 261 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இதில் 209 பேர் மீனவர்கள் மற்றவர்கள் பிற குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறைகளில்... : இதேபோல இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்த விவரத்தை தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ளது. அதன்படி 256 பாகிஸ்தானியர்கள் நமது நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ளனர். இதில் 99 பேர் மீனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் கைதிகள் தொடர்பான விவரத்தை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.