சகோதரர்கள் இருவருக்கு 5 மணி நேரத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்: அதுவும் இந்தியாவில்!
ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது தாயைப் பார்க்க இரண்டு சகோதரர்களுக்கு 5 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது தாயைப் பார்க்க இரண்டு சகோதரர்களுக்கு 5 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பாஸ்போர்ட் மண்டல அலுவலர் கடந்த சனிக்கிழமை மாலை, கோரமங்கலா பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து ஆஸ்திரேலியாவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தங்களது தாயைப் பார்க்க, உடனடியாக சகோதரர்கள் இரண்டு பேருக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் யார் என்றால், இரண்டு பெரிய வங்கிகளின் உயர் அதிகாரிகள்தான். கனரா வங்கி, தவரேகேரே கிளையின் பொது மேலாளர் ஜி.வி. ரகுசேஷு மற்றும் விஜயா வங்கியின் பொது மேலாளர் ஜி.வி. ராம மோகன் ஆகியோர்தான் அவர்கள்.
Advertisement
இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் எங்களது உறவினர்களிடம் இருந்து சனிக்கிழமை போன் வந்தது. அதில் பேசிய உறவினர்கள், ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற எங்களது தாயார், அங்கு நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆஸ்திரேலியா வருமாறும் கூறியதாகத் தெரிவித்தனர்.
தாயைப் பார்க்க வேண்டிய நிலையில், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பாஸ்போர்ட் மண்டல அலுவலர் பாரத் குமார் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு உடனடியாக செயலில் இறங்கினார். ஊழியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அலுவலகத்தை திறக்குமாறு உத்தரவிட்டு, உடனடியாக சகோதரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் இருவருக்கும் இரவு 9.45 மணிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இது குறித்து மண்டல அதிகாரி பாரத் குமார் கூறுகையில், ஒரு குடும்பத்தினர் சிக்கலில் இருக்கும் போது துரித கதியில் செயல்பட்டு அவர்களுக்கு உதவியதில் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.