இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருக்கும் அல் கய்தா: கூடவே பாகிஸ்தானையும் போட்டுக் கொடுத்த பரிதாபம்
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாத அமைப்பான அல் கய்தா விடியோ வெளியிட்டுள்ளது. அதில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவதையும் அந்த விடியோவில் போட்டுக் கொடுத்துள்ளனர்.
புது தில்லி: இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாத அமைப்பான அல் கய்தா விடியோ வெளியிட்டுள்ளது. அதில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவதையும் அந்த விடியோவில் போட்டுக் கொடுத்துள்ளனர்.
அல்கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாகிரி, காஷ்மீரை மறக்காதீர்கள் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் விடியோவில், இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்தியாவில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் பங்கையும் ஜவாகிரி பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார்.
Advertisement
இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் எதிரான தாக்குல்கள் மீது காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது பலத்த அடி விழ வேண்டும், அதோடு மனித வளத்தின் வளர்ச்சி பெரிய அளவில் சரிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பயங்கரவாதி ஜவாகிரி.
காஷ்மீர் போராளிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தாலும், அந்நாட்டிடம் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும், பாகிஸ்தான் நம்புவதற்கு ஏற்றது அல்ல என்றும், பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு ராணுவமும் அமெரிக்காவின் கைப்பாவைகளாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜவாகிரி.
காஷ்மீர் போர் என்பது ஏதோ தனித்து நடைபெறும் போர் அல்ல, அது உலகளாவிய அளவில் முஸ்லிம் மக்களுக்காக நடைபெறும் போரின் ஒரு பகுதிதான்.
அதோடு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடத்தை தேர்வு செய்யும் போது மசூதிகள், சந்தைப் பகுதிகள், முஸ்லிம் மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறி வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அல் கய்தா பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அங்கு இதர மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் இறந்திருக்கக் கூடும். ஆனால், அதுபோன்ற சமயங்களில் ஷரியா கொள்கைப்படி, முஜாகிதீன்கள் கொலைகாரர்களாக அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.