ஒசூர் விமான நிலையம் திறப்பதில் தாமதம் ஏன் என மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஏ. விஜயக்குமார் எழுப்பிய கேள்விக்கு, மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் (பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி பதிலளித்துள்ளார்.
அந்த பதிலில், ஒசூரில் தற்போதுள்ள விமான ஓடுபாதையானது டிஏஏஎல் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஓடுபாதை பெங்களூரு, கெம்பெகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் (பிஐஏஎல்) இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிஐஏஎல் இடையே மேற்கொள்ளப்பட்ட சலுகை ஒப்பந்தத்தின் ஷரத்துகளின்படி பெங்களூரு விமான நிலையத்தின் 150 கி.மீ. வான் தொலைவிற்குள் மைசூர் மற்றும் ஹசன் விமான நிலையங்கள் தவிர புதிதாக உள்நாட்டு அல்லது பன்னாட்டு விமான நிலையங்கள் அமைக்கவோ அல்லது மேம்படுத்தவோ அனுமதிக்கப்படாது' என்று தெரிவித்துள்ளார்.
தியாகிகள் ஓய்வூதியம்: இதேபோல், அதிமுக உறுப்பினர் ஏ.விஜயக்குமார் எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 394 பேர் மத்திய அரசின் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கௌரவிப்புத் திட்டத்தில் ஓய்தியம் பெற்று வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மாநில அரசிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைச்சகத்திடம் நிலுவையில் ஏதும் இல்லை' என்றார்.