பாஜக எம்பி-க்களுக்கு சிறப்பு அமர்வு மூலம் ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் வரும் வியாழக்கிழமை உரையாற்றுகிறார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இல்லத்தில் பாஜக எம்பி-க்களுக்கு ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் சிறப்பு அமர்வு மூலம் உரை ஆற்றுகிறார். இந்த அமர்வு வரும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், 150-க்கும் மேற்பட்ட எம்பி-க்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த சிறப்பு அமர்வில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் இருந்து எப்படி விலகாமல் இருக்க வேண்டும் என்பது குறித்து உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் உடன் ஐக்கியமாக இருக்கும் தலைவர்கள் தில்லியில் அதிகார மட்டத்துக்குச் சென்ற பிறகு அவர்களது கடமைகளை மறந்து அடிக்கடி அவசியமற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு கருதுகிறது.
ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 மற்றும் பசுப்பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான சட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எம்பி-க்களுக்கு கோபால் வழிநடத்தவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.