பேராசை வென்றது, கர்நாடக மக்கள் தோற்றனர்: ராகுல், பிரியங்கா ட்விட்டரில் சாடல்
அனைத்தையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை பாஜக நிச்சயம் ஒருநாள் உணரும் என்று பிரியங்கா வதேரா தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 எம்எல்ஏக்களும், எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்தே உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏனென்றால் தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தனர். அவர்களின் பேராசை இன்று வெற்றிபெற்றுவிட்டது. இதனால் நேர்மை, ஜனநாயகம் மற்றும் கர்நாடக மக்கள் தோல்வியடைந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா வதேரா கூறுகையில்,
அனைத்தையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை பாஜக நிச்சயம் ஒருநாள் உணரும். எல்லோரையும் அடக்க முடியாது. எனவே அப்போது அவர்களின் அனைத்து பொய்களும் வெளிப்படும். அதுவரை பல நாட்களாக பல தியாகங்களுக்கு மத்தியில் போராடி ஏற்படுத்தப்பட்ட நாட்டின் ஜனநாயகம், அமைப்பு ஆகியவை அழிவதையும், ஊழல் தலைவிரித்தாடுவதையும் மக்கள் பொருத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.