தெலங்கானாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 546 பேர் காணாமல் போயிருப்பதாக அம்மாநில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள். ஹைதராபாத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தே பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த கணக்கை அடிப்படையாகக் கொண்டு நாளொன்றுக்கு காணாமல் போனவர்களின் சராசரியைக் கண்டுபிடித்தால் 54 என்கிறது கணக்கு. அதாவது கடந்த 10 நாட்களில் தினமும் 54 பேர் காணாமல் போயுள்ளனர். இது அவ்வளவு சாதாரண எண் தானா?
ஆமாம், இது சாதாரண விஷயம்தான் என்கிறார்கள் தெலங்கானா காவல்துறையினர். 2016ம் ஆண்டும் இதேப்போன்று 16,134 பேர் மாயமாகியுள்ளனர். நாளென்றுக்கு சராசரி 44 பேர் என்கிறது புள்ளி விவரம்.
அதில்லாமல், கோடை காலத்தில் அதாவது மே, ஜூன் மாதத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், தேர்வு முடிவு, பள்ளித்திறப்பு போன்ற பல காரணங்களுக்காக சிறார் முதல் இளைஞர்கள் வரை வீட்டை விட்டு வெளியேறுவது வழக்கம். பெற்றோர் பயந்துபோய் காவல்துறையில் புகார் கொடுத்து விடுவதும், அடுத்த நாளே பிள்ளைகள் வீடு திரும்புவதும் வழக்கம். ஆனால் பதிவான வழக்கு பதிவானதாகவே இருக்கும்.
2018ம் ஆண்டு காணாமல் போனவர்கள் பற்றி கொடுத்த வழக்கில் 85 சதவீதம் முடித்துவைக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் காவல்துறையினர்.