பெங்களூரு: 55 வயதாகும் சமூக ஆர்வலர் பி. கிருஷ்ணமூர்த்தி. இவர் யாரையாவது பார்த்தால் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதற்கு பதில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று ஆலோசனைக் கூற ஆரம்பித்துவிடுவார்.
சிலர் இவர் சொல்வதைக் கேட்டு தலையை அசைத்தாலும், சிலர், எங்கள் பணம், எங்கள் தண்ணீர் உங்களுக்கென்ன என்று கேள்வி கேட்டு திணறடிப்பதும் உண்டு.
அப்போதுதான் அவர் முடிவு செய்தார். தண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்த மிகப்பெரிய கூட்டம் ஒன்று வேண்டும் என்று. அதற்கு வசதியாக தனது மகளின் திருமணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மத்தியில் பேசிய கிருஷ்ணமூர்த்தி, பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது ஏரிகளில் சுத்தமான நீர் கிடைத்தது. அதைத்தான் சமைக்க குடிக்கப் பயன்படுத்தினோம் என்று கூறினார்.
மேலும், விவசாய நிலங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் வாகனங்கள் திருமணம் நடைபெற்ற 2 நாட்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு, மக்களுக்கு அதுபற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. வீடு மற்றும் மனைகளிலும் மழை நீர் சேகரிப்பை எவ்வாறு செய்யலாம் என்றும் அவர்கள் விளக்கினார்கள். சுமார் 2500 விருந்தினர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அவர்களில் 500 பேர் இதைப் பின்பற்றினால் கூட போதும் என்கிறார் பெருமிதத்தோடு.
இந்த தம்பதியினர், திருமண அழைப்பிதழோடு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களையும் இணைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.