நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக, வரும் 22-ஆம் தேதி பொருளாதார நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருக்கிறார்.
2018-19-ஆம் நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.8 சதவீதமாக குறைந்துள்ளதாக அண்மையில் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை பிரச்னை 6.1 சதவீதமாக உள்ளதாகவும், 2018-19-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 6. 8 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தை மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நீதி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நீதி ஆயோக் அதிகாரிகளும், பல்வேறு அமைச்சர்களும், பிரபல பொருளாதார நிபுணர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 5-ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.