ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து 300 மீட்டர் ஆழம் கொண்ட கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
29 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக பேருந்தில் அளவுக்கு அதிகமாக 73 பேரை ஏற்றியதே இந்த விபத்துக்கக் காரணம் என்றும், பேருந்தின் மேற்கூரையிலும் பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
சம்பவ இடத்தை முதல்வர் ஜெய் ராம் தாகூர் நேரில் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் கோவிந்த் தாகூர் கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்து குலு காவல் துறை கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி கூறியதாவது:
குலு மாவட்டத்தின் பஞ்சார் தாலுகாவுக்கு உள்பட்ட டோத் மோர் என்ற இடத்தருகே, 300 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்தனர். 35 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காடா குஷைனி நகரை நோக்கி அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றார் அவர்.