குஜராத்தில் மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில் போட்டியிட வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தில்லியில் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், ஜெய்சங்கர் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.
பின்னர், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு வந்த அவர், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அவர்களின் மாநிலங்களவை இடம் காலியானது.
ஜெய்சங்கர், முந்தைய பாஜக தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவுச் செயலராக பதவி வகித்து வந்தார்.
தற்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக இருப்பவர், 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
குஜராத் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு தலைவர் ஜுகல்ஜி தாகோரும், குஜராத்தில் மாநிலங்களவை இடத்துக்கு போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மெஹசனா மாவட்டத்தில், தாகோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பாஜக தலைவர் ஜிது வகானி ஆகியோர், ஜுகால்ஜி தாகோரும், ஜெய்சங்கரும் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடனிருந்தனர்.
இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை கடைசி நாள்.
வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 28 ஆகும். மாநிலங்களவைத் தேர்தல் ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.