திருப்பதி: வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பச்சிளம் தாயை, அவரது பெற்றோரே கடத்திக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் உசிரிபெண்டா பகுதியைச் சேர்ந்த பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்த வந்த 23 வயது பெண் ஹேமாவதி, வேறு ஜாதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் கேசவலு என்ற இளைஞரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ஹேமாவதியையும், பச்சிளம் குழந்தையையும் கடத்தி வந்த பெண்ணின் பெற்றோர், பச்சிளம் குழந்தையின் தாய் என்றும் பாராமல் அவரை கொலை செய்து கால்வாயில் வீசிவிட்டு, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
குழந்தை அழுதச் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையையும், ஹேமாவதியின் உடலையும் கைப்பற்றினர். ஹேமாவதியின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும், கேசவலுவின் உறவினர்கள், ஹேமாவதி பெற்றோரின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்புதான் குழந்தையைப் பெற்றெடுத்த பச்சிளம் தாய் என்றும் பாராமல், மகளையே பெற்றோர் ஆணவக் கொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.