பிரதமர் நரேந்திர மோடி பணக்காரர்களின் பாதுகாவலர், அவர்களை மட்டுமே பாதுகாப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
"நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி மற்றும் அனில் அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு மட்டும் தான் மோடி பாதுகாவலராக இருக்கிறார். அவர் ஏழை மக்களின் பாதுகாவலர் அல்ல. அவர் பணக்காரர்களை மட்டுமே கட்டிப்பிடிப்பார். ஏழை மக்களை கட்டிப்பிடிக்கமாட்டார். மக்களை நண்பர்களே என்று அழைப்பார். ஆனால், அனில் அம்பானியை சகோதரரே என்று அழைப்பார்.
2014-இல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பல முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் அவர் எதுவுமே செய்யவில்லை.
தன்னை தானே பாதுகாவலர் என்று கூறிக்கொண்டவர் திருடனாக மாறிவிட்டார்.
மோடி வாக்குறுதிகளை அளிப்பார், ஆனால் நிறைவேற்ற மாட்டார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி அவர் எதுவுமே செய்யவில்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கோபத்திலும், வருத்தத்திலும் உள்ளனர்" என்றார்.