மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே அடுத்து மத்தியில்ஆட்சி அமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒடிஸாவின் நயாகரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பட்நாயக் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலின் முடிவில் மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமையும். அப்போது, மத்தியில் ஆட்சியாளர் யார் என்பதை முடிவு செய்வதிலும், ஆட்சியிலும் பிஜு ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும். ஒடிஸாவில் உள்ள 21 தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளம் வெற்றி பெறும். தற்போதைய மத்திய அரசால், ஒடிஸா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. ஒடிஸாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திருந்தால் நமது மாநிலத்தின் வளர்ச்சி இதைவிட சிறப்பாக இருந்திருக்கும்.
ரயில்வேக்கு அதிக வருமானம் தரும் மாநிலங்களில் ஒன்றாக ஒடிஸா திகழ்கிறது. ஆனால், ரயில்வே திட்டங்களில் நமது மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. நமது மாநிலத்தில் உள்ள நிலக்கரி வளத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மத்திய அரசு வருவாய் ஈட்டுகிறது. ஆனால் நமது மாநில வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவதில்லை என்றார் அவர்.