உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் டி-சர்ட் விற்பதில் பாஜக அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள், ஊதிய உயர்வு கோரி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களை உதவி ஆசிரியராக நியமித்து பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், உத்தரப் பிரதேசத்தில் தற்காலிக ஆசிரியர்களின் கடின உழைப்பு தினமும் அவமதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் தடியடி நடத்துகின்றனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்வதற்கு மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு நேரமில்லை.
அவர்கள் மீண்டும் மோடி என்று அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.