கொல்கத்தா: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் பற்றிய பிரதமர் மோடியின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை கடுமையாக விமரிசித்தார்.
அப்போது, "உங்கள் தந்தையை (ராஜீவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம். ஆனால், உண்மையில் அவர், "ஊழலில் முதலிடம் பெற்றவர்' என்ற பெயருடன்தான் மரணமடைந்தார்' என்று பிரதமர் பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் மம்தா பானர்ஜி, நான் தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால் இது குறித்து தாமதமாக எனது கருத்தினை பதிவு செய்வதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ராஜீவ் காந்தி குறித்து மோடி கூறியிருக்கும் கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. ராஜீவ் காந்தி தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர், தனது இன்னுயிரையே நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். அவரைப் பற்றி மோடி பேசிய பேச்சுக்கு கடும் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.