உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரின் சொத்துகளை முடக்க முசாஃபர்நகர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முசாஃபர்நகர் மாவட்டம், காவேல் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் ஷாநவாஸ் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முசாஃபர்நகர் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 60 பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் குடிபெயர்ந்தனர்.
ஷாநவாஸை கொலை செய்ததாக ரவீந்தர், பிரகலாத், பிஷன் சிங், டெண்டுல்கர், தேவேந்தர், ஜிதேந்தர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முசாஃபர்நகர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 6 பேரை கைது செய்யுமாறும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், குற்றவாளிகளை காவல் துறையினரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராகேஷ் கெளதம் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இதுவரை சரணடையவில்லை என்பது குறிப்பிட்டு கூறப்பட்டது. அதன் பின்னர், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரின் சொத்துகளையும் முடக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.