வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் மீதான இரட்டை வரி விதிப்பை நீக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஏபிபி) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டேவுக்கு ஏபிபி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
2017-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மின் உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் மதிப்புக்கு ஏற்ப வரி செலுத்திய பிறகும் கூட அதன்மீது சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வற்புறுத்தப்படுகிறது. எனவே, நிலக்கரி இறக்குமதி கட்டணத்தின் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் முழு மதிப்புக்கு ஐஜிஎஸ்டி வரியை செலுத்தியபோதிலும், மீண்டும் ஜிஎஸ்டி பெயரில் வரி வசூலிக்கப்படுவது இரட்டை வரிவிதிப்பாக உள்ளது.
இது, சட்டப்படி தவறாகும். இருப்பினும், இந்த பிரச்னையை கண்டறிந்து தீர்க்கும் வகையிலான அறிவிப்பாணைகள் இதுவரையில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என அந்த கடிதத்தில் ஏபிபி-யின் தலைமை இயக்குநர் அசோக் குரானா தெரிவித்துள்ளார்.