குஜராத்தில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள 4 மாடி வணிக வளாகத்தில் தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் சூழ்ந்ததால், பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள், உயிர் பிழைப்பதற்காக, ஜன்னல்கள் வழியாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
தகவல் அறிந்து 19 தீயணைப்பு வண்டிகள், 2 மீட்பு ஏணி வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்த தீயணைப்புப் படையினர், மாடியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரவும் போராடினர். இந்த விபத்தில் மாடியில் இருந்து குதித்து பலத்த காயமடைந்ததாலும், புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் உள்பட்டவர்கள்.
சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக் கொண்டு வரப்பட்டது. கட்டடத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.