மும்பை/கொல்கத்தா/போபால்: ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், "ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டால் நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டது. அந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மட்டும் ராகுல் மன்னிப்பு கோரியது போதாது.
உலக அரங்கில் இந்தியாவுக்கென ஒரு பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ள பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவமதிக்க ராகுல் காந்தியும், காங்கிரஸýம் முயற்சித்தனர். எனவே அவர்களிடமும் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்' என்றார்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக இளைஞரணியினர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, மெüலாலி பகுதியில் இருந்து மத்திய கொல்கத்தாவில் பேரவைக் கட்டடம் வரை பாஜக இளைஞரணியினர் பேரணியாகச் சென்றனர். ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், ராகுலின் உருவபொம்மையையும் எரித்தனர்.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ரோஷன்புரா சதுக்கம் பகுதியில் மாநில பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ராகேஷ் சிங் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் சிங், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ரஃபேல் விவாகரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்திடம் மட்டும் அல்ல; நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.