குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அயோத்தியில் உள்ள பசுக்களுக்கு சணல் கோட்டுகளை தயாரிக்கும் பணியில் அயோத்தி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தற்போது பசுக்களை குளிர்காலத்தில் இருந்து பாதுகாக்க, சணல் கோட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தியின் நகர் நிஹாம் கமிஷனர் நிராஜ் சுக்லா கூறுகையில், 'பசுக்களுக்கு கோட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தத் திட்டம் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதலில் பைஷிங்பூரில் உள்ள 1200 கால்நடைகளில் 100 பசுக்களுக்கு கோட்டுகளுக்கு ஆர்டர் எடுத்துள்ளோம். நவம்பர் மாத இறுதியில் இந்தக் கோட்டுகள் வந்து சேரும். ஒவ்வொரு பசு கோட்டுக்கும் ரூ.250-300 செலவாகும்.
அதேபோன்று கன்றுகளுக்கு மூன்று அடுக்கு கோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. குளிரில் கன்றுகளை பாதுகாக்க சணல் தவிர, உட்புற அடுக்கில் மென்மையான ஆடைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுள்ளோம். மாடுகள் மற்றும் காளைகளுக்கான கோட்டுகளுக்கு தனித்தனி வடிவமைப்புகள் இருக்கும். காளைகளுக்கு சணலால் செய்யப்பட்ட கோட்டுகள் இருக்கும்.
அதுமட்டுமின்றி, பசுக்களை கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசுக்கள் இருக்கும் இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று கால்நடைகள் அமர, வைக்கோல் தரையில் வைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.