சரத் பவார்தான் எங்கள் தலைவர்; என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்: அஜித் பவார் அதிரடி!
சரத் பவார்தான் தங்கள் தலைவர் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சரத் பவார்தான் தங்கள் தலைவர் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆதரவு தந்து நேற்று துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரே இரவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகப் பொறுப்பேற்ற அஜித் பவார், மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் அரசு அமைத்தமைக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த தலைவர்களுக்கு அஜித் பவார் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ள அஜித் பவார்,
"மகாராஷ்டிர மக்கள் நலனுக்காக கடினமாக உழைக்கும் நிலையான ஆட்சியை நாங்கள் தருவோம்" என்று உறுதியளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து டிவீட் செய்துள்ள அவர்,
"நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். என்றும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பேன். சரத் பவார்தான் எங்கள் தலைவர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியைத் தரும். அது மகாராஷ்டிர மக்கள் நலனுக்காகவும், மாநிலத்துக்காகவும் நேர்மையாக செயல்படும்.
வருத்தப்படுவதற்கு ஏதும் இல்லை. அனைத்தும் சுமூகமாகவே உள்ளது. இருப்பினும் சற்று அமைதி காக்க வேண்டியுள்ளது. அனைவரது ஆதரவுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.