சத்தீஸ்கரின் பேமேதரா மாவட்டத்தில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுத்துச் சென்ற வாகனத்திலிருந்து ரூ.1.64 கோடியை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
காந்த்சரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நவாகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக, ஒரு தனியார் நிறுவனத்தின் வாகனம் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. ஜால் மற்றும் அடாரியா ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, அந்த வாகனத்தின் டயர் திடீரென பஞ்சரானது. இதையடுத்து, மாற்று டயரை பொருத்தும் பணியில் வாகனத்தின் ஓட்டுநரும், ஆயுதம் தாங்கிய பாதுகாவலரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 4 பேர், ஒரு காரில் வந்தனர். வாகனத்தின் பாதுகாவலரை துப்பாக்கிமுனையில் மிரட்டிய அவர்கள், லாக்கரை திறக்கச் செய்து, ரூ.1.64 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பினர். அத்துடன், பாதுகாவ
லரிடமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.
பின்னர், பகுல் கிராமத்தில் தங்களது காரை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல கொள்ளையர்கள் முயன்றனர். அவர்களை பிடிக்க கிராமவாசிகள் சிலர் முயன்றனர்.அப்போது, வானத்தை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும், கிராமவாசிகள் துணிச்சலுடன் செயல்பட்டு, 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மூவரையும் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது என்றார் அந்த அதிகாரி.