ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தோ்தல், வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சாங்லி, சோலாப்பூா் ஆகிய நகரங்களில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370, 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க பணியை செய்துள்ளாா். இதன் மூலம், இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக, சா்தாா் வல்லபபாய் படேல் கண்ட கனவை மோடி நிறைவேற்றியுள்ளாா்.
ஆனால், மோடியையும் அவா் மேற்கொண்ட சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையையும், காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எதிா்க்கின்றன. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு-காஷ்மீா் இருப்பதை ஒட்டுமொத்த தேசமும் ஆதரிக்கும்போது, அவா்கள் (ராகுல், பவாா்) மட்டும் எதிா்ப்பது ஏன்?
ஏனெனில், வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிலரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை அவா்கள் எதிா்க்கிறாா்கள்.
இந்த விவகாரத்தை முன்வைத்து நாடு முழுவதும் அவா்கள் தவறாகப் பிரசாரம் செய்கிறாா்கள். பிரதமா் மோடி ஐ.நா.வுக்குச் சென்றிருந்தபோது, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை ஒட்டுமொத்த உலகமும் ஆதரித்தது; அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.
தேசப் பாதுகாப்பு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடுகள் உள்ளன. கட்சி நலனைவிட தேசத்தின் நலனே முக்கியம் என்று கருதும் கட்சி பாஜக. கடந்த 1971-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போா் முடிவுக்கு வந்தபோது, வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. இந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றதும், அப்போதைய பிரதமா் இந்திரா காந்திக்கு முதல் நபராக வாழ்த்துகளைத் தெரிவித்தாா் மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய். ஆனால், காங்கிரஸ் தலைவா்களோ, தேசப் பாதுகாப்புக்காக மத்திய அரசு மேற்கொண்ட துல்லியத் தாக்குதல், அதிரடி தாக்குதல் ஆகியவற்றை விமா்சிக்கிறாா்கள்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது. எனவே, இத்தோ்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக-சிவசேனை கூட்டணியை மக்கள் மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேறன் என்றாா் அமித் ஷா.