கேரளா, கர்நாடகாவுக்கு இன்று பலத்த மழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபா் 17-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இதன்காரணமாக, வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபா் 17-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செவ்வாய்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று சத்தீஸ்கர், ஒடிஸா, அஸ்ஸாம், மேகாலயா, நாகாலந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.15) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.