தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!
கேரளத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல்..
கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியின் இடுக்கி வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கேரளம் வந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குருவின் சமாதியைத் தரிசனம் செய்தார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை சிவகிரி மடத்தில் மகாத்மா காந்திக்கும் ஸ்ரீ நாராயண குருவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் 100வது ஆண்டு நினைவு நாளில் உரையாற்றினார். சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவை நினைவுகூர்ந்த காங்கிரஸ் தலைவர், பெரும் செல்வத்தையோ அல்லது உடல் வலிமையையோ கொண்டிருக்கவில்லை என்றாலும், துறவி தத்துவஞானி கேரளத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர் என்று கூறினார்.
பிரிட்டிசாரிடம் பலம் இருந்தது. ஆனால் அதிகாரம் இல்லை. காந்தியிடம் பலம் இல்லை, ஆனால் அவரிடம் உண்மை இருந்தது. அதனால் அவருக்கு அதிகாரம் இருந்தது. நாராயண குருவிடம் பலமோ, செல்வமோ இல்லை. ஆனால் அவர் கேரளத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் வகுப்பைச் சேர்ந்த பலர் இன்று நாராயண குருவை நினைவுகூர வந்துள்ளனர் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். வன்முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு காந்திஜி, நாராயண குருஜியிடமிருந்து ஒரு தெளிவான செய்தி உள்ளது. வன்முறையால் எதுவும் பெற முடியாது, இழக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
"தி கேரளா ஸ்டோரி 2" பற்றிய விவாதத்தைக் குறிப்பிட்டு, திரைப்படங்களும் ஊடகங்களும் சமூகத்தைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அரசியல் பிரசாரத்திற்காக சினிமா, ஊடகங்களைப் பயன்படுத்துவதையும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
இதனிடையே, இன்று காலை கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
வயநாட்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தனது அனுபவத்தையும், மாநில மக்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களையும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் கேரள சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.