சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? ராகுல்!
அடூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பேரணிக் கூட்டத்தில் ராகுல்.
சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அடூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பேரணிக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் தங்கள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ - எம்) மற்றும் பாஜக ஆகிய இரண்டின் கூட்டணியை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இத்தேர்தலில் பாஜகவின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ள இடதுசாரி கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒருபுறம் ஐக்கிய ஜனநாயக முன்னணி, மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் கூட்டுச் சேர்க்கையில் உள்ளது. கேரளத்தில் பாஜகவின் மறைமுகக் கை ஒன்று செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கேரளத்தில் யுடிஎஃப் ஆட்சி அமைப்பதை பாஜக விரும்பவில்லை. தேசிய அளவில் தங்களை எதிர்த்து நிற்கும் ஒரே சக்தி காங்கிரஸ் என்பது அவர்களுக்குத் தெரியும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் எங்களுக்குச் சித்தாந்த ரீதியான போராட்டம் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலையில், கேரளத்தில் உள்ள எல்டிஎஃப் தலைமையின் மீது அத்தகைய அழுத்தங்கள் எதுவும் செலுத்தப்படுவதில்லை.
இதுவரை நான் 36 வழக்குகளை எதிர்கொண்டுள்ளேன். தொடர்ந்து 55 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். ஆனால், கேளர முதல்வர் மீதோ அல்லது எல்டிஎஃப் தலைவர்கள் மீதோ அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை.
ஞாயிறன்று பாலக்காட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, பிரதமர் அடிக்கடி கோயில்கள், மதம் குறித்துப் பேசுபவர், ஆனால் சபரிமலை விவகாரத்தில் மட்டும் மௌனம் காப்பார்.
சபரிமலை குறித்துப் பேச அவர் மறந்துவிட்டார் போல.. ஐயப்பன் கோயில் தொடர்பான விவகாரங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை. இது, பாஜக - எல்டிஎஃப் கட்சிகள் இணைந்து செயல்படுவதையே காட்டுகிறது.
தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே பிரதமர் மதரீதியான விவகாரங்களை எழுப்புவார். மோடியைப் பொறுத்தவரை, வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றால் மட்டுமே அவர் கோயில் விவகாரம் குறித்துப் பேசுவார். இல்லையெனில், அவர் மௌனம் சாதிப்பார்.
ஐயப்பன் கோயில் தொடர்பான முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது யுடிஎஃப் ஆட்சிக்கு வரும்போது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பேற்கச் செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.