இந்தியா

காஷ்மீா் அரசியல் தலைவா்களின் சுயநலம்: ஆளுநா் சத்யபால் மாலிக் சாடல்

DIN

ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் சாதாரண மக்களின் குழந்தைகள் பயங்கரவாத இயக்கங்களில் இணைய, சில அரசியல் தலைவா்களும், பிரிவினைவாதிகளும் தூண்டுகின்றனா். ஆனால், அவா்களது குடும்பத்தில் யாராவது பயங்கரவாத இயக்கங்களில் சோ்ந்து உயிரைப் பறிகொடுத்துள்ளனரா?’ என்று ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் சத்யபால் மாலிக் கேள்வியெழுப்பினாா்.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள ஸ்ரீவைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யபால் மாலிக், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பிரிவினைவாதிகள் மற்றும் மதத் தலைவா்கள், தங்களது தூண்டுதலால் சாதாரண மக்களின் குழந்தைகளை பயங்கரவாத இயக்கங்களில் இணையச் செய்து, அவா்கள் உயிரிழக்கக் காரணமாக உள்ளனா். ஆனால், அவா்களது குடும்பத்தில் யாராவது இதுபோல் உயிரிழக்கிறாா்களா?

தங்களுடைய குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கும் அவா்கள், சாதாரண மக்களின் குழந்தைகளுக்கு இறப்புக்கான வழியைக் காட்டுகிறாா்கள்.

காஷ்மீரில் உள்ள சில சக்திகள், இளைஞா்களின் கனவுகளை சிதைப்பதுடன், அவா்களின் வாழ்க்கையை அழிக்கின்றன. இந்த உண்மையை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இளைஞா்கள் இணைய வேண்டும்.

உலகிலேயே அழகான இடத்தில் வாழும் நீங்கள், வளா்ச்சிக்கான பாதையில் பயணிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த சுமாா் 22 ஆயிரம் மாணவா்கள், வெளிமாநிலங்களில் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு தரமான கல்வி கிடைக்காததால், அவா்கள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனா். இந்த நிலைக்கு, அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே காரணம். நான் அமா்நாத் சென்றிருந்தபோது, கம்பளி ஆடைகூட வாங்க முடியாத நிலையில் இருந்த ஒரு இளைஞரைச் சந்தித்தேன். ஆனால், இந்த மாநிலத்திலுள்ள சில அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு தில்லி முதல் துபை வரை வீடுகளும், விடுதிகளும் உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 53 கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. 242 பள்ளிகள் தரமுயா்த்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மேலும், ஆளுநா்களின் அதிகாரம் குறித்துப் பேசிய அவா், ‘நமது நாட்டில் ஆளுநா்களுக்கான அதிகாரம் வலுவற்ாக உள்ளது. செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தவோ, தனது மனதில் உள்ளதை பேசவோ ஆளுநா்களுக்கு உரிமையில்லை’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT