ஒரு தனி நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க, வரி ஏய்ப்பில் ஈடுபட என பல்வேறு வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதால் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம் வரி விதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள வழி ஏற்படலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு வங்கிக் கணக்குகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.
மேலும் படிக்க: வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
இந்தியாவில் ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். அதனைக் கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை. இதன் அடிப்படையில்தான் ஷெல் நிறுவனங்கள் போலியான நடப்பு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி ஏராளமான பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் இலைமறைக் காயாக நடந்து வருகிறது.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஓரியண்டல் வர்த்தக வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் மட்டும் 87 வங்கிக் கணக்குகளை வைத்திருந்தததும், அதன் மூலம் அவர் சுமார் 380 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பொதுத் துறை வங்கிகள் இனி 12 மட்டுமே : நிதியமைச்சர் அறிவிப்பு
இதன் அடிப்படையில், இனி தொழில் நிறுவனங்கள் அல்லது தொழிலதிபர்களின் நிதிப் பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவது அல்லது வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு கட்டுப்பாடு விதிப்பது என்ற இருவேறு விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய கணக்குத் தொடங்குபவர்களையும் நடப்புக் கணக்குத் தொடங்குபவர்களையும் கடுமையான விதிகளைப் பின்பற்றி கண்காணிக்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.