மகாராஷ்டிர மாநிலத்தில் தங்களது மாமியாரின் இறுதிச் சடங்கின் போது, அவரது உடலை மருமகள்கள் நால்வர் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர்பாய் நைக்வாடே என்ற 83 வயது பெண்மணிக்கு 4 மகன்கள். அவர்களுக்குத் திருமணம் ஆன நிலையில், 4 மருமகளையும் அவர் தனது மகளைப் போலவே நடத்தி வந்துள்ளார். மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவர் கண்தானம் செய்திருந்த நிலையில், இறந்தவுடன் அவரது ஆசைப்படியே அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. தங்களை நன்றாகக் கவனித்துக்கொண்ட மாமியாருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று மருமகள்கள், இறந்த மாமியாரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இந்த நிகழ்வு அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் மாமியார்- மருமகள் எலியும், பூனையுமாக இருக்கும் சூழ்நிலையில், இம்மாதிரியான ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான்.