நாடு முழுவதும் ஹிந்தி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஹிந்தி தினத்துக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் நாம் அனைவரும் மதித்து நடக்க வேண்டும். நாம் எத்தனை மொழி கற்றாலும் தாய் மொழியை மட்டும் என்றும் மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஹிந்தி தினத்தை முன்னிட்டு ஹிந்தி மொழி சார்ந்த அனைவருக்கும் தனது வாழ்த்தினை பகிர்ந்துகொண்டார்.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஹிந்தி என்பது வெறும் மொழி மட்டும் கிடையாது. அது ஒரு கலாச்சாரமும் கூட. உலகளவில் நம்நாட்டுக்கு ஹிந்தி மொழி புது அடையாளம் அளித்துள்ளது. எனவே ஹிந்தி மொழியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ஹிந்தி மொழி கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹிந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது நாட்டின் ஒறுமைப்பாட்டிலும், கலாச்சாரத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக நமது அன்றாட வாழ்வில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்போம் என்று தெரிவித்தார்.
சுமார் 258 மில்லியன் மக்களின் தாய்மொழியாக ஹிந்தி உள்ளது. மேலும் உலகளவில் 4-ஆவது பெரிய மொழியாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.