எல்ஐசி மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கிறது மத்திய அரசு: பிரியங்கா குற்றச்சாட்டு
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மத்திய அரசு குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மத்திய அரசு குலைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டரை மாதங்களில் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.57,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகின. அந்த அறிக்கையைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பகிர்ந்து, பிரியங்கா பதிவிட்டுள்ளதாவது:
இந்தியாவைப் பொருத்தவரையில், எல்ஐசியின் மற்றொரு பெயர் நம்பிக்கை. மக்கள் கடினமாக உழைத்துப் பெற்ற பணத்தை எதிர்காலத் தேவைகளுக்காக எல்ஐசியில் முதலீடு செய்துவருகின்றனர். ஆனால், எல்ஐசி நிறுவனத்திடம் உள்ள பணத்தை இழப்பு ஏற்படும் நிறுவனங்கள் மீது பாஜக அரசு முதலீடு செய்து வருகிறது.
இதன் மூலம், எல்ஐசி மீதான மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு குலைத்து வருகிறது. இதனால், எல்ஐசி நிறுவனமும் இழப்பைச் சந்தித்துள்ளது. லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்துவதுதான் மத்திய அரசின் கொள்கையா? என்று பிரியங்கா அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்காக மக்களின் பணத்தை மத்திய அரசு வாரி இறைப்பதாக காங்கிரஸ் கடந்த புதன்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தது. இழப்பு ஏற்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான எல்ஐசியின் முதலீடு, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.11.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.22.64 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிக்கை வெளியிட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.