இந்தியா

மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை; நீரோடையில் மூங்கில் பாலம் அமைத்து அசத்திய மாணவர்கள்!

Muthumari

மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்வது தடைபடுவதால், ஆசிரியர்களின் உதவியோடு நீரோடையில் மூங்கில் பாலம் அமைத்துள்ளனர் மகாராஷ்டிர பள்ளி மாணவர்கள்.  

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் நிம் சவுக்கி கோர்(Nim Chauki Khore) என்ற மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்குச் செல்லும் வழியில் நீரோடை ஒன்று உள்ளது. மழைக்காலத்தில் இந்த நீரோடையில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் ஓடும். இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.

மேலும், நீரோடையைக் கடக்கும் போது வெள்ளத்தில் மாணவர்கள் அடித்துச் செல்லப்படும் அபாயமும் நிகழும். மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாததால் பள்ளிகள் சரியாக இயங்காது. இந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 15 மாணவர்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தினமும் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பள்ளிக்குச் செல்வது தடைபடக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நீரோடையின் மேல் மூங்கில் பாலம் கட்டும் வேலையில் ஈடுபட்டனர். இதற்காக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி அளித்தனர். 

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர்  இணைந்து மூங்கில் பாலம் கட்டியுள்ளனர். இதற்கு ஆன செலவு வெறும் ரூ.50 மட்டுமே. தேவையான மூங்கில்களை சேகரித்து அதனை இணைப்பதற்கான கயிறு மட்டும் வாங்கி ஒரு வாரத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாணவர் பிரதீப் கூறும் போது, மழைக்காலங்களில் நாங்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது. எங்களது புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். நாங்கள் நீரோடையை கடக்கும்போது எங்களது உடைகள் அனைத்தும் நனைந்து விடும். அப்படியே தான் பள்ளிக்குச் செல்வோம்.

அதிகமாக நீர் பெருக்கு ஏற்பட்டால் அன்று பள்ளிக்குச் செல்ல முடியாது. தற்போது பாலம் கட்டியதன் மூலமாக நாங்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார். 

மாணவர்களின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT