முகப்பு
இந்தியா

குறைகிறதா மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:11 AM
கோப்புப்படம்
பகிர்:


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசின் ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும். மத்திய அரசின் மருத்துவர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆகும். அதேசமயம், பல்வேறு மாநில அரசுகள் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 62 ஆக உயர்த்தியது. 

இந்நிலையில், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த புதிய யோசனையின்படி, 60 வயதை எட்டினாலோ அல்லது பணியில் 33 ஆண்டுகளைக் கடந்தாலோ அந்த ஊழியர் ஓய்வு பெற வேண்டும். இதில் எது முதலில் வருகிறதோ, அதன்படி ஓய்வைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதற்கான முன்மொழிவைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான முன்மொழிவை பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை தற்போது நிதிக் கணக்கீடுகளுக்காக செலவீனத் துறையின் வசம் உள்ளது.

ஒருவேளை, இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட அளவிற்கு வேலையின்மை பிரச்னையை இது சரி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், தேக்கத்தில் இருக்கும் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை துரிதப்படுத்தும் என்றும் நாளடைவில் மத்திய அரசின் செலவைக் குறைக்க இது எளிதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனிடையே 2018-19 இல் வெளியான பொருளாதார ஆய்வு, இந்தியாவில் ஆயுட் கால விகிதம் அதிகரித்துக்கொண்டு இருப்பதால், பணியாளர்களின் ஓய்வு வயதையும் அதிகரிக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.