முகப்பு
இந்தியா

ரஃபேல் தீர்ப்பு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வித்திட்டுள்ளது: ராகுல் காந்தி

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரஃபேல் ஊழலை விசாரிப்பதற்கான மிகப் பெரிய கதவை திறந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:07 PM
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
பகிர்:


ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரஃபேல் ஊழலை விசாரிப்பதற்கான மிகப் பெரிய கதவை திறந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த தீர்ப்பு குறித்து டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,

"உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப், ரஃபேல் ஊழல் குறித்து விசாரணை நடத்த மிகப் பெரிய கதவை திறந்துவைத்துள்ளார். எனவே, இதுகுறித்து முழு அக்கறையுடன் விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 

"உச்சநீதிமன்றத் தீர்ப்பை வாசிக்காமலேயே அதைக் கொண்டாடுவது பாஜகவின் வழக்கமாக உள்ளது. போர் விமானத்தின் விலை, தொழில்நுட்ப விவரக் குறிப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட விவகாரங்கள் சட்டப்பிரிவு 32-இன் வரம்புக்குள் வராது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ரஃபேல் வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறந்துவைத்துள்ளது.

ரஃபேல் தீர்ப்பில் பாஜக தேசத்தை தவறாக வழிநடத்துகிறது. எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாமல் சிபிஐயை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.