போபால்: மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசக்கு முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3588 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 99 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசக்கு காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அவர் ஹிந்தியில் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதுள்ள கரோனா ஊரடங்கு காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று, மத்திய பிரதேசத்திலும் மதிய உணவுக்கு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று மதிய உணவு கொடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.